தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Saturday 23 February 2013

தேவதாஸ் உண்மை நாவல்


தேவதாசும் நானும் 
தேவதாஸ் உண்மை நாவல் 

தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது.

சரத்சந்திர சட்டோபாத்யாயா வங்காளத்தின் பெரும்புகழ்கொண்ட எழுத்தாளர். தாகூரை விடவும் அதிக பேரோடு இருந்தார் என்கிறார்கள். பக்கிம் சந்திரர், தாகூர் போன்றவர்கள் சமூகமாற்றம், சுதந்திர போராட்டம், மெய்தேடல் என்று தீவிரமான தளங்களில் படைப்புகளை எழுதிக் கொண்டிருந்த போது சரத்சந்திர் எளிமையான, சுவாரஸ்யமான காதல்கதைகளை, பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட குடும்ப நாவல்களை எழுதியிருக்கிறார்.

தேவதாஸ் நாவல் அளவில் சிறியது. அதை ஒரு குறுநாவல் என்று சொல்லலாம். 1917ம் ஆண்டு வெளியாகி உள்ளது. சரத்சந்திரர் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பர்மாவில் சில காலம் வேலை செய்திருக்கிறார். முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். இந்த 93 வருசங்களில் நாவல் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கபெற்றிருக்கிறது. இன்று வாசிக்கையில் 90 வருசங்களுக்கு முந்தைய நாவல் என்ற பழமை இதில் துளியுமில்லை. சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதியை போன்றே உள்ளது. சில அத்யாயங்கள், பத்திகள் மட்டுமே அதிகப்படியானதாக, தேவையற்ற விளக்கமாக தென்படுகிறது. மற்றபடி நாவல் ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய சுவாரஸ்யத்தை இப்போதும் தனக்குள் கொண்டிருக்கிறது.

நாவலை வாசித்து முடிக்கையில் தேவதாஸின் காதலை விடவும் தேவதாஸை காதலித்தவர்களே முக்கியமானவர்களாக மாறுவதை உணர முடிந்தது. நாவல் முழுவதும் குற்றமனப்பாங்கில் உருவான வேதனையை தாங்கி கொள்ளவே தேவதாஸ் குடிக்கிறான். அவன் காதலில் தோற்கவில்லை மாறாக காதலைப் புறக்கணிக்கிறான். அதன் காரணமாக தன்னை அழித்து கொள்கிறான். அவன் பார்வதியையும் காதலிக்கவில்லை. சந்திரமுகியையும் காதலிக்கவில்லை. ஆனால் அந்த இரண்டுபெண்களும் தேவதாஸைக் காதலிக்கிறார்கள். அவனுக்காகவே வாழ்கிறார்கள்.

தேவதாஸை காதலிப்பது என்பதை தங்களது இருப்பின் ஆதாரமாக இரண்டுபெண்களுமே கொண்டிருக்கிறார்கள். தேவதாஸ் அவ்வளவு தீவிரமான காதலன் இல்லை. அவன் சிறுவயதில் இருந்தே தனது குடும்பப் பெருமை. தனிமை, வசதியான வீட்டுபிள்ளைகளின் முரட்டுதனம், அதிகாரம் இவற்றால் உருவாக்கபடுகிறான்.

பாரு என்ற பார்வதி தான் தேவதாஸின் அகத்தை உருவாக்குகிறாள். அவனை புரிந்து கொள்ளவும் அவனது முரட்டுதனத்தின் பின்னால் பகிர்ந்து கொள்ளபடாத அன்பு இருப்பதையும் அடையாளம் கண்டு கொள்கிறாள். அதை தேவதாஸ் தன் வாழ்நாளின் இறுதியில் தான் அடையாளம் காண்கிறான். தேவதாஸின் மிரட்டல்கள், அடி யாவற்றையும் பார்வதி ஏற்றுக் கொள்கிறாள். பார்வதியை பிரிந்து கல்கத்தாவிற்கு படிக்க போன தேவதாஸ் அவளைப்பற்றி கவலைபடவேயில்லை. நினைத்து ஏங்கவேயில்லை. அவளை மறந்து நகரவாசியாகி உல்லாசமும் அலங்காரமுமாக தன்னை உருமாற்றி கொண்டுவிடுகிறான். ஆனால் பார்வதி அவனைக் காதலிக்கிறாள். பிரிவால் வேதனைபடுகிறாள். பார்வதிக்கு தேவதாஸைப் பற்றி நினைத்து கொண்டேயிருப்பது தான் அன்றாட வேலை.

பள்ளியில் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சை பார்த்து வேதனைபடுகிறாள். தேவதாஸின் வீட்டினை பார்த்து பார்த்து பெருமூச்சிடுகிறாள். தேவதாஸ் நகரத்தில் படித்த யுவனாக திரும்பி வருகையில் பட்டிக்காட்டு பெண்ணாக திறந்த மனதோடு அவனிடம் அன்பைச் செலுத்துகிறாள். தேவதாஸ் பாருவை காதலித்தை விடவும் பாரு தேவதாஸைக் காதலித்து அதிகம். அவள் தேவதாஸ் முன்னால் அடக்கமான பெண்ணில்லை. மாறாக காதலின் உன்மத்தம் பிடித்தவள்.

அவள் 90 வருசங்களுக்கு முந்தைய கிராமத்தில் வசித்த முக்காடு இட்ட அடங்கி ஒடுங்கிப்போகும் வங்காள குடும்ப்ப் பெண்ணை போல உருவாக்கபடவில்லை. மாறாக அவள் காதலுக்காக எதையும் செய்ய தயராக இருக்கிறாள். தன்னை நம்புகிறாள். தனது கனவுகள் நிறைவேற அவள் தைரியமாக தேவதாஸைத் தேடிப் போகிறாள். தேவதாஸிடம் முதன்முறையாக காதலை சொல்பவள் பார்வதியே. உண்மையில் தேவதாஸ் அந்தக் கால குடும்ப பெண்களை போல அதை கண்டு அதிர்ச்சியடைகிறான்.

எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். ஆசை ஒருபக்கமிருந்தாலும் வீட்டின் பராம்பரிய பெருமையை காக்க அவளை விட்டு விலகிப் போகலாம் என்று நினைக்கிறான். பெற்றோரை காரணம் காட்டி சமாதானம் சொல்கிறான். பார்வதி அதை நம்பவில்லை.

இரவில் யாரும் அறியாமல் ரகசியமாக தேவதாஸைத் தேடி வீடு வந்து காதலை சொல்லும் பார்வதியிடம் தனது ஆசையின் காரணமாக பெற்றோர்கள் அவமதிக்கபட வேண்டுமா என்பதற்கு பாரு அவர்களை அவமதிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது தேவதாஸ். தயங்காதே. காதல் தான் முக்கியமானது என்கிறாள்.

இவ்வளவு துணிச்சலாக தன் காதலை வெளிப்படுத்திய பெண்ணாகவே பாரு நாவலில் சித்தரிக்கபடுகிறாள். உண்மையில் தேவதாஸ் காதலை அறியவும் இல்லை. காதல் சார்ந்து முடிவு எடுக்க முடியவுமில்லை. அவன் பாருவைப் புறக்கணிக்கிறான். அந்த புறக்கணிப்பு பாருவை அவன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறது. அவள் திருமணத்தின் முன்புவரை தேவதாஸ் தன்னைத் திருமணம் செய்து கொண்டுவிடுவான் என்று நம்புகிறாள். திருமணமான பிறகும் தேவதாஸ் என்றாவது தன்னைப் புரிந்து கொள்வான் என்று ஏங்குகிறாள்.

நாவலில் வரும் பார்வதிக்கு வயது பதிமூன்று. தேவதாஸின் வயது பத்தொன்பது. நிறைய நேரங்களில் இது சிலப்பதிகாரத்தை வாசித்து கொண்டிருப்பதை போன்ற மனமயக்கத்தை தந்தபடியே இருந்தது.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கல்விக்காக நகரங்களை தேடி செல்வது வசதிபடைத்தவர்களின் இயல்பு. இங்கிலாந்திற்கும், கல்கத்தாவிற்கும் இலங்கைக்கும் கல்விக்காக அனுப்பட்ட ஜமீன்தார்கள்,ராவ்பகதூர் வீட்டுபிள்ளைகளின் கதைகள் நிறையவே இருக்கின்றன. தங்களது குடும்ப கௌரவத்தை காப்பாற்றவும் அதிகாரத்தின் உச்சநிலையை அடையவுமே இவர்கள் கல்வியைத் தேர்வு செய்தார்கள்.

தேவதாஸ் நகரத்திற்குச் சென்றபோதும் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. அவனுக்கு வாழ்க்கை சுகமாக கழிய வேண்டும் அவ்வளவே. அதிலும் கட்டுபாடுகள், ஒழுக்கவிதிகள், பயம் இவையில்லாத தினசரி வாழ்க்கைக்காகவே அவன் கல்கத்தாவிற்கு போகிறான். படித்து திரும்பிவந்த தேவதாஸ் முன்பு போல இயல்பாக இல்லை என்பதை பாரு கண்டுபிடிக்கிறாள். ஒருவேளை தேவதாஸின் மனசாட்சியை போலவே அவள் நடந்து கொள்கிறாள் என்பதால் தானோ என்னவோ தேவதாஸ் அவளை அடைவதில் ஆர்வம் காட்டவேயில்லை.

நாவலில் தேவதாஸ் பார்வதி கல்யாணம் பேச்சு நடக்கிறது. ஆனால் தேவதாஸின் அம்மா அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். காரணம் பார்வதியின் வீட்டில் அவர்கள் பெண் கொடுக்கும் போது மாப்பிள்ளையிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பெண்ணை அனுப்பும் வழக்கம் கொண்டவர்கள். அதாவது மாப்பிள்ளை சீதனம் தந்து பெண்ணை கட்டிக் கொள்ள வேண்டும். இது தான் அவர்களின் குலவழக்கம். ஆனால் அதை பார்வதியின் அப்பா ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். தன்னுடைய பெண்ணை விற்பதைப் போல இந்தச் செயல் இருக்கிறது. ஆகவே அவளை கட்டிக் கொள்ள போகிறவனிடம் தான் பணம் பெறப்போவதில்லை என்று கூறுகிறார்.

இதை அறியாமல் தேவதாஸின் அம்மா அவர்கள் பெண்களை விலை கூறி விற்ககூடிய குடும்பம் ஆகவே அவர்களோடு சம்பந்தம் வைக்க கூடாது என்கிறாள். இந்த பிரச்சனையோடு அவர்கள் பக்கத்து வீடாகவும் இருக்கிறார்கள். ஆகவே அடுத்த வீட்டிற்கு பெண் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது. அது நாளை அவமானமாக கருதப்படும் என்கிறாள். இதை தேவதாஸ் நம்புகிறான். ஏற்றுக் கொள்கிறான். அது தான் பார்வதியை கோபபடுத்துகிறது. பார்வதியின் முன்னால் எப்போதுமே தேவதாஸ் அடங்கியவனாகவே இருக்கிறான். அவனால் தன்னை மறைத்துக் கொள்ள முடிவதில்லை. வெளிச்சத்தை தூக்கி பிடிக்கும் போது இருள் எதிர் நிற்காமல் ஒடிவிடுவதை போல பார்வதி நேரடியாக அவனிடம் கேள்விகேட்கும் போது அவன் தடுமாறுகிறான். உண்மையை மறைக்க முடியாமல் சிரமப்படுகிறான்

நாவலில் வங்காள கிராமத்தில் உள்ள ஜமீன்தார் குடும்பங்களின் அழிவு மறைமுகமாக மிக நுட்பமாக சித்தரிக்கபடுகிறது. குறிப்பாக தேவதாஸின் அண்ணன், வேலையில்லாமல் ஊதாரியாக இருப்பது. படிப்பை முடிக்கும் முன்பே அவனுக்கு திருமணம் செய்து வைத்தது. அவன் மனைவி பிள்ளைகள், ஜமீன்தார் சொத்துகள் அவர்கள் கண்முன்னே அழிவது என்று ஒரு வீழ்ச்சியின் பாடலை அவர்கள் குடும்பம் முணுமுணுத்தபடியே உள்ளது. அதிலிருந்து வெளியேற விரும்புகிறான் தேவதாஸ். அதற்குள் வந்து வாழ விரும்புகிறாள் பார்வதி.

திரைபடங்களில் பார்வதியை திருமணம் செய்து கொள்ள போகின்ற மனைவியை இழந்த ஜமீன்தார் வயதான ஆளாக காட்டப்படுகிறார். நாவலில் அவருக்கு வயது நாற்பது. ஆனால் அவருக்கு இருபது வயதில் மகன் இருக்கிறான். மகள் திருமணமாகி தனியே வாழ்கிறாள். பார்வதி இரண்டாம் மனைவியாக வாழப்போகின்ற திருமணத்தை வெறுக்கவில்லை. அது தான் தனது வாழ்க்கை என்றால் அதை எப்படி எதிர்கொள்வது என்று மட்டுமே யோசிக்கிறாள். செயல்படுத்துகிறாள்.

ஆனால் திருமணம் ஆன உடனே காதலை மறைத்து கொண்டு தன்னை தானே ஏமாற்றிக் கொள்ள அவள் முயற்சிக்கவில்லை. திருமணம் தனக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடி. அதனால் தேவதாûஸ விட்டு தான் பிரிய நேரிடுமே அன்றி அவனை ஒரு போதும் மறக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறாள். பாருவின் காதல் தான் நாவலெங்கும் கொப்பளிக்கிறது. திரைப்படங்களை விடவும் வலிமையாக அவளை எழுத்தில் சரத் சந்திரர் உருவாக்கியிருக்கிறார்.

குறிப்பாக அப்பாவின் மரணத்தின் பிறகு தேவதாஸ் கிராமத்தில் இருக்கிறான். அங்கே தன்னை தேடிவரும் பார்வதியிடம் தனக்காக ஒரு பெண் பார்க்க முடியுமா என்று கேட்கிறான். பெண் எப்படியிருக்க வேண்டும் என்றதும் உன்னை போலதான் என்று சொல்கிறான். அப்படி ஒரு பெண்கிடைப்பது எளிதில்லை என்கிறாள் பார்வதி.

அது உண்மையே. நாவலை இயங்க செய்வது பாருவின் செயல்களே. அதற்கு தேவதாஸ் எதிர்வினை மட்டுமே செய்கிறான்.தேவதாஸிடம் கனவுகள் இல்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தே பார்ப்பதில்லை. கடந்தகாலமும் அவனை சந்தோஷம் கொள்ள வைக்கவில்லை. அவன் நிகழ்காலத்தில் மயங்கி கிடக்க விரும்புகிறான். அவனது தடுமாற்றங்களே அவனை வெளியே இழுக்கின்றன.

தேவதாஸிற்கு பார்வதி தேவைப்படுகிறாள். அதற்கான காரணம் காதல் இல்லை. மாறாக தன்னை புரிந்து கொண்ட தனது செயல்களை பாராட்டுகின்ற, தன்னை எந்த கட்டுபாடும் இல்லாமல் நேசிக்கின்றன ஒரு ஆள் அவனுக்கு தேவை. அது பார்வதியாக மட்டுமே இருக்கிறாள். அவளை இழந்துவிட்டதை தேவதாஸ் மிக தாதமாகவே உணர்கிறான். எப்படி அவளை மீட்பது என்று தெரியவில்லை. அப்போதும் அவனை சமூக அந்தஸ்து தடுக்கிறது. அவளுக்கு நல்வாழ்த்து சொல்லிவிட்டு தைரியமற்ற தன் இருப்பை தானே அழித்து கொள்வது என்று முடிவு செய்கிறான். குடிக்காமல் போயிருந்தால் தேவதாஸ் மூர்க்கமான குற்றவாளியாகியிருப்பான். அல்லது மனநிலை கலங்கி போயிருப்பான்.

நகரத்திற்கு செல்பவர்கள் கெட்டு சீரழிந்து போவார்கள் என்ற நம்பிககை நீண்டகாலமாகவே இந்தியாவின் கிராமங்கள் அத்தனையிலும் இருந்தது. அதை மையமாக கொண்டு நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் வெற்றிக்கும் அதுவே காரணமாக இருந்திருக்க கூடும். ஒருவேளை தேவதாஸ் கல்கத்தாவிற்கு அனுப்பபடாமல் கிராமத்திலே இருந்திருந்தால் அவன் பாருவை திருமணம் செய்து கொண்டிருக்க கூடும். வேறு சம்பவங்களின் வழியே கதை நீண்டிருக்க கூடும்

நாவல் திரைப்படம் இரண்டிலுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரே கதாபாத்திரம் தேவதாஸின் வேலையாள் தர்மதாஸ். மிக உயர்வான மனிதர் அவர். அவர் தான் தேவதாûஸ வளர்க்கிறார். தேவதாஸின் துடுக்கத்தனத்தை. கோபத்தை அவர் ஒருவரே எதிர்கொள்கிறார். தேவதாஸ் கல்கத்தாவிற்கு படிக்க சென்ற போது கூடவே போகிறார். தேவதாஸ் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்தும் அவனை தடுக்கமுடியாதபடி எஜமான விசுவாசத்தில் அவன் சொல்வதை எல்லாம் செய்கிறார்.

பார்வதி ஒரு முறை தர்மதாஸிடம் தேவதாஸ் எப்படியிருக்கிறான் என்று உண்மையை சொல்லுங்கள் என துயரம் ததும்ப கேட்கிறாள். மனம் உடைந்து தலையில் அடித்தபடியே என் கண்முன்னே அவர் மது. வேசை நோய்கள் எனகொஞ்சம் கொஞ்சமாக தன்னை அழித்துகொண்டிருக்கிறார். அதை காண்பதற்கு பதில் செத்துபோய்விடலாம் என்கிறார்.. நோய் முற்றி உடல் நலமில்லாமல் தேவதாஸ் ஒடுங்கி கிடக்கும் போதும் தர்மதாஸ் கூடவே இருக்கிறார். மித மிஞ்சி குடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடக்கும் தேவதாûஸ தூக்கி போய் பராமரிக்கிறார். தேவதாஸின் வீழ்ச்சிக்கு காரணம் அவன் பாருவை புறக்கணித்ததே என்று அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தவேயில்லை, இறுதியாக ரயிலில் வரும்போது உறங்கி கொண்டிருந்த தர்மதாûஸ எழுப்பாமல் பார்வதியின் ஊரை நோக்கி அவசரமாக ரயில்நிலையத்தில் இறங்கிவிடுகிறான் தேவதாஸ். மழையோடு மாட்டுவண்டியில் சென்று பார்வதியை பார்க்காமலே இறந்தும் விடுகிறான்.

தர்மதாஸ் என்னவாகியிருப்பார். ரயிலில் கண்விழித்த தர்மதாஸ் தனது எஜமானனை காணாமல் உடனே அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி தேடி அலைந்திருப்பார். காசிக்கு போகலாம் என்று சொல்லி ரயில் ஏற்றியதால் காசியில் அலைந்து தேடியிருக்க கூடும். சாகும்போது தர்மதாஸ் கூட தேவதாஸின் அருகாமையில் இல்லை. தன்னை முழுமையாக நேசித்த பார்வதியை, தர்மதாûஸ பிரிந்து வந்ததன் தண்டனை போலவே அவனது மரணம் அமைகிறது. அந்த மரணம் திரைப்படங்களை விட நாவலில் மிக உக்கிரமாக எழுதப்பட்டிருக்கிறது.

அநாதை பிணமாக கிடக்கிறான் தேவதாஸ். அவன் பிராமணன் என்றபோதும் அவன் உடலை தொட்டு இறுதிகாரியம் செய்ய எவரும் முன்வரவில்லை. அவனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை எடுத்து கொண்டு ஒரு சூத்திரன் அவனை எரிக்க முன்வருகிறான்.அவன் தேவதாûஸ முழுமையாக எரிக்கவில்லை. பாதி எரிந்து போன அவன் உடலை காகங்களும் நாய்களும் நரிகளும் இழுத்து கொண்டு தின்கின்றன. சாவிற்கு பிறகும் தேவதாஸ் நிம்மதியடையேவில்லை.

பார்வதியின் எதிர்உருவம் போலவே சந்திரமுகி நாவலில் உருவாக்கபட்டிருக்கிறாள். அவள் தேவதாûஸ விட வயதானவள். பார்வதியை விடவும் அவள் அழகி. வசதியானவள். ஆடல்பாடல்களில் தேர்ந்தவள். அவளுக்கு எண்ணிக்கையற்ற ஆண்களை தெரியும். நகரமே அவள் கைவசம். ஆனால் தேவதாஸ் அவளை முதல்சந்திப்பிலே வெறுக்கிறான். அந்த வெறுப்பின் அடையாளமாக பணம் தந்து அலட்சியமாக வெளியேறி போகிறான்.

தன்னை வெறுக்கின்ற ஒருவனை அப்போது தான் சந்திரமுகி சந்திக்கிறாள். தான் அணிந்துள்ள வேஷத்தை ஒருவன் சுட்டிகாட்டுகிறான் என்ற உண்மை அவளைச் சுடுகிறது. அவள் முதல்சந்திப்பிலே தேவதாஸ் மீது ஈர்ப்பு கொண்டுவிடுகிறாள். அவனை மறுமுறை பாரக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

தேவதாஸ் பார்வதியை புறக்கணித்தை போலவே அவளையும் புறக்கணிக்கிறான். மறுமுறை அவளை சந்திக்க போன போது நாள் கணக்கில் குடிக்கிறான். பொதுவில் குடிப்பவர்களை வெறுக்கும் சந்திரமுகி அவனை குடிக்க அனுமதிக்கிறாள். அவன் போதையில் பார்வதியை பற்றி உளறுகிறான். நினைவு தெளிந்தவுடன் சந்திரமுகியை வெறுக்கிறான். வெறுப்பில் வளர்கிறது அவளது காதல். அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். எல்லா பொருள்களையும் விற்றுவிட்டு ஒரு வேலைக்காரியாக வாழப்போவதாக தேவதாஸிடம் சொல்கிறாள். அதன்படியே கல்கத்தாவை ஒட்டிய கிராமம் ஒன்றிற்கு இடம் பெயர்கிறாள்.

அதே நேரம் பார்வதி வாழ்வில் வசதி அடைகிறாள். பெரிய வீடு. வேலையாட்கள், குடும்ப பொறுப்பு என்று எதிர்திசையில் செல்கிறாள். இருவருமே தேவதாûஸ காதலிப்பதால் நெருக்கடி கொள்கிறார்கள். ஆனால் எல்லா வலியையும் மீறி தேவதாûஸ நம்புகிறார்கள். காதலின் இந்த இரண்டு முனைகளுக்கு நடுவில் வெறுமனே ஊசலாடிக் கொண்டுதானிருக்கிறான் தேவதாஸ்.

அவன் குடிக்க துவங்கியது காதலின் தோல்வியால் அல்ல. தனது குற்றமனப்பாங்கை மறைத்து கொள்வதற்காகவே. அதை சந்திரமுகியே சொல்கிறாள் அவன் தனது கோழைத்தனத்தை. சுயகௌரவத்தை காப்பாற்றி கொள்ள வேஷமிடுகிறான். அது சரியாக பொருந்திவிடுகிறது. ஆகவே அவன் குடியில் தஞ்சமடைகிறான்.

தேவதாஸ் பார்வதியை தேடி செல்ல முடிவு எடுப்பது கூட மிக தாமதமான தற்செயலாகவே உள்ளது. அவன் தன்னை சாவிலிருந்து பார்வதியால் காப்பாற்றிவிட முடியும் என்று உள்ளுற நம்பியிருக்ககூடும். அதனால் தானோ என்னவோ அவசர அவசரமாக அவளை காண போகிறான். மரணம் அவனை துரத்தும் போது காதல் தன்னை காப்பாற்றிவிடும் என்று நம்புகிறான். ஒரு போதும் காதலின் வலியை இத்தனை தீவிரமாக அனுபவித்திராத தேவதாஸ் கடைசி நிமிசங்களில் மட்டுமே அதை உணர்கிறான். அதனால் தானோ என்னவோ நாவலில் இறுதிபத்தியை ஆசிரியரே தன் குரலில் விளக்குகிறார். தேவதாஸ் போன்ற மனிதர்களை கண்டால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். தனக்காக கண்ணீர்விடும் மனிதனின் ஒரு சொட்டு கண்ணீரை கண்டபடியே ஒரு மனிதன் இறந்து போவதே அவனது பாக்கியம் என்று நாவலை நிறைவு செய்கிறார்.

நாவலில் அவனது மரணசெய்தி அறிந்து தனது முக்காட்டை வீசிஎறிந்துவிட்டு குடும்ப கட்டுபாடுகளை மீறி வெளியேறி பார்வதி ஒடிவருகிறாள். அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தடுத்தி நிறுத்திவிடுகிறார்கள். அவள் மூர்ச்சையாகிறாள். தன் உணர்வு வந்து தனக்காக தேவதாஸ் ஒரு இரவு வெளியே காத்திருந்ததை நினைத்து புலம்புகிறாள். அதன்பிறகு அவள் பேசவேயில்லை என்பதோடு நாவல் நிறைவுறுகிறது.

பார்வதியை விட சந்திரமுகி தனது பலவீனங்களை அறிந்து கடந்து போகிறாள். புத்தன் மூன்று காட்சிகளால் விழிப்புற்று துறவியாகி வெளியேறியது போன்றதே சந்திரமுகியின் முடிவும். அவள் தேவதாஸிடம் எதை கண்டாள். அந்த காதல் எங்கிருந்து உருவாகிறது. அழகோ,வசதியோ இல்லை. அதை கண்டு பெண்கள் மயங்குவதுமில்லை. தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆண்கள் எளிதாக இருக்கிறார்கள். பெண்களால் எல்லாவற்றையும் பேசிவிட முடிவதில்லை. மௌனமாகவே அவர்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் இழப்புகள் அத்தனையும் பெண்களுக்கு மட்டுமே நடக்கிறது என்கிறாள்

பார்வதியும் சந்திரமுகியும் தேவதாஸிற்கு சேவை செய்யவே விரும்புகிறாள். பார்வதி ஆசைபட்டது சந்திரமுகிக்கு கிடைக்கிறது. நோயாளியை கூட இருந்து சொஸ்தமாக்குகிறாள். தேவதாசிற்கு சேவை செய்துவிட்டால் பிறகு செத்துகூட போய்விடலாம் என்று பார்வதி சொல்வதை கேட்டு தேவதாஸ் ஒரு முறை அழுகிறான். அங்கே தான் அவனது காதல் முதன்முறையாக அவள் முன்னால் வெளிப்படுகிறது. சாவதற்கு முன்பாக அவளை தேடிவருகிறேன் என்று உறுதி சொல்கிறான்.

தேவதாûஸ நேசித்தவர்கள் அத்தனை பேரும் புறக்கணிக்கவேபடுகிறார்கள். அவர்கள் தங்களது ஆறாத துயரத்தோடு தேவதாஸிற்காக காத்திருக்கிறார்கள். இந்திய குடும்பங்களில் நூற்றாண்டாக இருந்து வந்த ஆண்பிம்பமே தேவதாஸôக உருக் கொண்டிருக்கிறது. தேவதாஸ் காதலை ஒரு போதும் கொண்டவில்லை. காதலிக்கபடுகிறான். அதை முழுமையாக அறிந்து கொள்வதுமில்லை. பார்வதி தன் முகத்தில் தேவதாஸôல் ஏற்பட்ட வடுவை காட்டி இது வெறும் காயமில்லை. நம் காதலின் அடையாளம். நம் பால்ய கால கதையை என் நெற்றியில் எழுதிவிட்டிருக்கிறாய் என்கிறாய். பார்வதியின் மனதில் பால்யம் தேவதாஸ் என்ற ஒற்றை உருவமாகவே நிரம்பியிருக்கிறது. தேவதாஸ் அதை புரிந்து கொள்ளவேயில்லை.

உலகெங்கும் புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படமாக்கடும் போது அதிக வாசகர்கள் அதை தேடி படித்து நாவலோடு சினிமாவை ஒப்பிடுகிறார்கள். விவாதிக்கிறார்கள். தேவதாஸ் நாவல் படமாக்கபட்ட விதம் குறித்தும் அப்படி நிறைய வாதங்கள் நடந்திருக்கின்றன. மௌனப்படம் துவங்கி மிக பிரம்மாண்டமான பொருள்செலவில் உருவானது வரை பல்வேறுவடிவங்களில் தேவதாஸ் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இன்று குடிப்பதோ காதல்தோல்வியோ பெரிய பிரச்சனைகள் இல்லை. ஆனாலும் தேவதாஸ் தேவைப்படுகின்றவனாக இருக்கிறான். காரணம் பெண்களின் காதலைப் புரிந்து கொள்ளாத தடுமாற்றமிக்க ஆண்கள் இருக்கின்ற வரை தேவதாஸ் இருந்து கொண்டேதான் இருப்பான் போலும்.

இன்றும் தேவதாஸ் நாவல் அதன் ஆதார அளவில் உணர்ச்சிதுடிப்போடும் ஈரத்தோடுமேயிருக்கிறது. அதுவே காலத்தை மீறிய அதன்வெற்றி என்பேன்.