தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday 24 October 2012

பிக்பாக்கெட் திருடிகள் எச்சரிக்கை

பிக்பாக்கெட் திருடிகள் எச்சரிக்கை 



சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த ஒரு வாலிபரின் முன்னும் பின்னும் நின்று கொண்டு அவரை உரசியபடி சில்மிஷம் செய்து அந்த நபரின் கவனத்தை கலைத்து, பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கோணம் சென்றிருந்தார். அங்கிருந்து மூர் மார்க்கெட் போவதற்காக மின்சார ரயிலில் பயணித்தார். பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த பயணியின் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தார். அதேபோல முன்னால் ஒரு பெண் நின்றிருந்தார். இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல நடித்து, கும்பகோணம் பயணியை உரசியபடி வந்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக நெருக்கி உரசியதால் கும்பகோணத்துக்காரர் தடுமாறிப் போனார். இதைப் பயன்படுத்தி அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை ஒரு பெண் திருடிக் கொண்டார். இது தெரியாத கும்பகோணத்துக்காரர் மூர்மார்க்கெட் வந்து சேர்ந்தார். அங்கு இறங்கிய பிறகுதான் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் கூச்சல் போடவே, அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் சந்தேகப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கும்பகோணத்துக்காரரின் பர்ஸ் அவர்களிடம் இருந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதுபோல கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண் பயணிகளை உரசியபடி பயணம் செய்து அவர்களை திசை திருப்பி விட்டு விட்டு பர்ஸை சுடுவது இவர்களது தொழிலாம்.

நீதி: பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பெண்கள் உங்களை உரசுவது போல நின்றால், உணர்ச்சிவசப்படாமல்,ஹி ஹி ! சற்று கவனமாக இருப்பது நல்லது.

Saturday 13 October 2012

வரலாற்று நாவல்கள்



வரலாற்று நாவல்கள் 

வரலாற்று நாவல்களை படிப்பது என்பது தற்போது வழக்கொழிந்ததாகவே போய்விட்டது ,அப்படிப்பட்ட நாவல்கள் தமிழில் தற்போது வருவதே இல்லை .மன்னர் கால திரைப்படங்களும் தற்போது தயாரிக்க படுவது இல்லை அப்படியும் ஏதோ ஓரிரு படங்கள் வந்தால் அது காமடி பீசாகவே அமைந்துவிடுகிறது உதரணத்திற்கு- 23ம் புலிகேசி -ஆயிரத்தில் ஒருவன் (கார்த்திக் நடித்தது )

இந்த நிலையில் கற்பனையும், கருத்தும், கவித்துவமும்,கதையோடு இணைந்த கலைநயமும் கொண்ட நாவல்கள் நம் தமிழகத்திலும் ஈழத்திலும்,சாண்டிலயன் ,கல்கி ,வினோதகன்,மு.வ ,  சி.என்.அண்ணாதுரை , எண்ணற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டன .. 

அதிலும் கல்கியின் எழுத்து நடை, சாண்டில்யனின் காதல் சாறு என்று தேடித் படிப்பவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம், அவர்களின் புத்தகங்கள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது, இலவசமாக பதிவிறக்கம் செய்து நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம், அப்படிப் பட்ட இலவச இணையங்களை உங்களுக்கு அறிமுக படுத்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகிறேன் ..


படித்து பயன்பெறுக ..

Tuesday 2 October 2012

மன்னருடன் ஒருநாள்




மன்னருடன் ஒருநாள் 
ராஜாதி ராஜா ராஜமார்த்தாண்ட ராஜகுல திலகராஜகம்பீர ராஜகுலோதுங்க நம் இந்திய மாண்புமிகு மாமன்னருடன் ஒருநாள் அவரின் அன்றாட நிகழ்ச்சியில் பங்குபெற உங்களை போல நானும் ஆவல் கொண்டு spl permision வாங்கி கூத்தடித்த கதை இதோ உங்களுக்காக ......
இதில்தான் நம் மாண்புமிகு மன்னர் ஜாலி மூடில் உக்கார்ந்து இருப்பார்

வரலாற்றில் நாம் படித்த மன்னர்களுக்கும், கதைகளில் வரும் மன்னர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மன்னர்களின் பெயர்கள், அரசாண்ட வருடங்கள், போரில் அடைந்த வெற்றிகள், அரசாட்சி யின் சாதனைகள், தோல்விகள் ஆகியவை மட்டுமே பாடப் புத்தகங்களில் இருக்கின்றன. ஓர் அரசன் எத்தனை மணிக்கு எழுந்துகொள்வார், என்ன சாப்பிட்டார், எந்த விதமான உடைகளை அணிந்தார், எப்படி நீதிபரிபாலனம் செய்தார், எவ்வாறு உத்தரவு பிறப்பித்தார், எந்த இசையை விரும்பிக் கேட்டார், எந்தப் பெண்ணைக் காதலித்தார், யார் அவரது குரு... என்று, மன்னர்களின் ராஜ வாழ்க்கை பற்றி பல நூறு கேள்விகள் சாமான்யர்களின் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. அதை எழுத்தாளனின் கற்பனைதான் பல நேரங்களில் பூர்த்தி செய்கிறது.அப்படி என்றால், மன்னர்களின் அன்றாட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லையா? இந்த விஷயத்தில் மொகலாய மன்னர் கள் முன்னோடிகள். சக்கரவர்த்தி தூங்கி எழுந்ததில் இருந்து இரவு நடன விருந்து வரை அத்தனை முக்கிய நிகழ்வுகளையும் துல்லியமாக எழுதிவைத்து இருக்கிறார்கள்.

மன்னரானவர் அதிகாலை 3 மணிக்கு எழுந் துகொள்கிறார். அதுவும், அவராக எழுவது இல்லை. துயில் எழுப்புவது மன்னருக்குப் பிடித்த ராணி யின் வேலை. மன்னர் எந்தப் பெண்ணோடு எந்த அறையில் தூங்கினாலும், துயில் எழுப்பும் ராணிதான் தினமும் எழுப்ப வேண்டும். சூரியன் உதயமாவதற்குள், மக்களைச் சந்திக்க மன்னர் தயாராகிவிட வேண்டும் என்பது நடைமுறை.பன்னீரும் ரோஜாப்பூக்களும் பெர்ஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்த நீரில் குளித்துவிட்டு தயாராக வேண்டும்.


இந்தக் குளியல் கூடத்தில் 12 பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள், மன்னர் குளிப்பதற்கான தண்ணீரைத் தனியே முத்திரையிட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இளம் சூடான தண்ணீரில்தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்ய தனியாக ஒரு பணியாள் இருந்தார்.அதுபோல, மன்னரின் உடலுக்கு சந்தனம் மற்றும் வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிடுவதற்கு பணிப்பெண்கள் உண்டு. குளித்து முடிந்தவுடன் அவருக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களில் எதை அவர் அணிந்துகொள்வது என்று தேர்வு செய்வார்கள். மன்னர் அந்த வஸ்திரத்தை அணிந்துகொண்டதும் சிறு பறை எழுப்பப்படும். அந்த ஓசை மன்னர் துயில் நீங்கி தனது நாளைத் துவக்கிவிட்டார் என்பதற்கான அறிவிப்பு.



அதன் பிறகு, அரண்மனை வைத்தியர் மன்ன ருக்கு நாடி பரிசோதனை செய்து, அவரது வயிற்று உபாதைகள், உஷ்ணம், நாக்கின் தன்மை, மூத்திர நிறம், மலத்தின் தன்மை, தோல் நிற மாற்றம், பாதங் களின் மிருது, சுவாச வேகம் போன்றவற்றை அறிந்து சொல்வார். மருத்துவரின் ஆலோசனைப்படி, என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த பழரசத்தை விலக்கிவைக்க வேண்டும் என்பதை மன்னர் முடிவு செய்துகொள்வார்.இதற்குப் பிறகு, மன்னர் தனது குருவை, கடவுளை வணங்க வேண்டும். தினமும் அறவுரை வழங்க ஓர் ஞானி அரண்மனையில் இருப்பார். அவர் அன்றைக்கான ஞானவுரையை மன்னருக்கு சொல்வார். அதைப் பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும். அது முடிந்தவுடன் மன்னருக்காக விசேஷமாக பூஜை செய்து கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் அர்ச்சகர்கள் காத்திருப்பார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்தியர்கள் அதிகாலையில் சூரியனை வழிபடு கிறார்கள் என்பதால், சூரியனை வழிபடும் நேரத்தில் அரசன் தரிசனம் தருவது முக்கியமானது என்ற நடைமுறை, அக்பர் காலத்தில் இருந்து இருக்கிறது. அதனால், மன்னர் மக்களைச் சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட தனி மாடத்தில் நிற்பார். அதிகாலையிலேயே கூடி நிற்கும் மக்கள், மன்னரை வணங்கி வாழ்த்தொலி சொல்வார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மன்னர், சூரியனை வணங்குவார்.


பின், மக்கள் குறை தீர்ப்பதற்கு திறந்தவெளி தர்பார் தொடங்கிவிடும். இது, ஒன்றரை மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில், மக்கள் எளிதாக மன்னரை அணுகி தங்களின் பிரச்னைகளை முறையிடலாம். அங்கு கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பிரச்னைகள் முறையாக விசாரிக்கப்பட்டு நீதித் துறை எழுத்தர்கள் மூலம் குறிப்பு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

பெரும்பாலும், மன்னருக்கு காலை உணவு கிடையாது. பழங்களும் பழரசங்களும் மட்டுமே அளிக்கப்படும். மன்னருக்கான பழரசம் தயாரிக்கப்பட்டு தங்கக் குடுவைகளில் நிரப்பி அதை முத்திரையிடுவார்கள். அது என்ன பழச்சாறு என்ற பெயர் குடுவையில் பொறிக்கப்பட்டு இருக்கும். முத்திரையிடுவதற்கு என, சமையல் அறையில் தனிஅதிகாரி இருப்பார். அவரது முத்திரை பெற்ற குடுவையை, அரசனின் உணவுப்பிரிவு அதிகாரி ஒருவர் பார்வையிடுவார்.


சமையல் பணிகள் செய்பவர்களில் புதுஆட்களை வேலைக்குச் சேர்க்கவோ, சமையல் செய்பவர்கள் காரணம் இல்லாமல் விடுப்பு எடுக்கவோ அனுமதி இல்லை. இதற்குக் காரணம், அவர்கள் சதி செய்துவிடுவார்கள் என்பதே!

!மன்னர் அன்றாடம் அரசாங்க விலங்குகளைப் பார்வை​யிட வேண்டும். அதற்காக நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்​​ கை​கொண்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசுக்கள், கோவேறுக் கழுதைகள் ஆகியவை, மன்னர் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்படும்.




விலங்குகள் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பார்வையிட்டு, அதற்கேற்ப உரிய ஆலோசனைகள், சன்மானங்​களை மன்னர் வழங்குவார். மோசமான நிலையில் உள்ள விலங்குகளைப் பராமரிக்கும் காப்பாளருக்குச் சம்பளக் குறைப்பு செய்யப்படுவதும் உண்டு. தாக், தாஷிகா என்ற அடையாளக் குறியீடு செய்த குதிரைகளைப் பார்வையிடுவதும், புதிதாக விலங்குகள் வாங்கப்படுவது குறித்தும், அதன் விலை குறித்தும், மன்னர் ஆலோசனை வழங்குவார்





இதுபோலவே, படைக்கலன்களைப் பார்வையிடுதல், சித்திர வேலைப்பாடுகளைப் பார்வையிடல், உருவப் படம் வரைவது, மொழிபெயர்க்கப்பட்ட ஏடுகளை வாசித்து அறிவது, புதிதாக நெய்து கொண்டுவரப்பட்ட ஆடைகளைக் காண்பது, வைரம் வெட்டுபவர்கள், நுண்கலை விற்பன்னர்கள், கட்டடக் கலைஞர்கள், வரைபடம் தயாரிப்பவர்கள் போன்றவர்களுடன் ஆலோசனை செய்வது என, தினம் ஒன்று வீதம் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும்.



மன்னர் 30 விதமான வாள்களைப் பயன்படுத்துவார். ஒவ்வொரு வாளுக்கும் தனிப்பெயர் உண்டு. 8 குறுங்கத்திகள், 20 ஈட்டிகள், 86 அம்புகள் மன்னர் உபயோகத்துக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்​பட்டு இருந்தன. அதைத் தினமும் பரிசோதனை செய்துபார்ப்பது மன்னரின் வழக்கம். இந்த அலுவல்கள் முற்பகலில் நாலரை மணி நேரம் நடந்து இருக்கின்றன. அது முடிந்தவுடன், அரசர் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார்

மதிய உணவுதான் அரசனின் பிரதான உணவு என்பதால், அதைத் தயாரிப்பதற்கு என, 30 சிறப்புச் சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை நிர்வகிக்க தலைமைச் சமையல்காரர் ஒருவர் இருந்தார். சமையலறைப் பணியாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலையில் இருந்துள்ளனர்.


மிகச்சிறந்த அரிசி முதல் கடுகு வரை தனியாக ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை சேமிப்புக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். கங்கை நதியில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு அதில்தான் சமையல் செய்து இருக்கிறார்கள். தானியத்தில் செய்யப்படும் உணவு வகைகள், காய்கறிகளைச் சமைப்பது, பல்வேறு விதமான அசைவ உணவு வகைகள், இனிப்புப் பண்டங்கள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு என, மதிய உணவில் 135 வகை உணவுகள் பரிமாறப்படும்.











தலைமைச் சமையல்​காரர் தினமும் உணவுப் பதிவேடு ஒன்றை எழுத வேண்டும். அதில், மன்னருக்கு இன்று என்ன உணவு தயாரிக்கப்பட்டது. அதைச் செய்தவர் யார் என்ற விவரங்கள் பதிவு செய்யப்படும்.தங்கம், வெள்ளி, செம்பு,வெண்கலப் பாத்திரங்கள் உணவுக் கலயங்களாகப் பயன்படுத்தப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக் கலயங்களில் சிவப்பு நிறத் துணி மூடி முத்திரை வைக்கப்பட்டு இருக்கும். வெண்கலம் மற்றும் சீனக் களிமண் கலயங்கள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டு இருக்கும்.


விரத நாட்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாமிசம் விலக்கப்பட வேண்டும் என்பதால், அந்த நாட்கள் மட்டும் தனித்துக் குறிக்கப்பட்டு, அன்றைய சமையலில் எந்த அசைவ உணவும் இடம்பெறாது. மற்ற நாட்களில் ஆடு, மாடு, கோழி, வான்கோழி, மான், முயல், காடை, மீன்கள், நண்டு உள்ளிட்ட 16 வகை மாமிச உணவுகள் தயாரிக்கப்படும்.உணவு வேளையில், மன்னருக்கு முன் ஒவ்வோர் உணவும் விஷப் பரிசோதனை செய்யப்​பட்டு, பிறகே பரிமாறப்படும். அதுபோல, உணவு பரிமாறுகிறவன் தும்மிவிட்டால், அது அபசகுனமாகக் கருதப்படும்.





ஒன்றரை மணி நேரம் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மன்னர் வெற்றிலை போடுவார். அதற்காக, தங்கக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு, வாசனை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும்.




.உணவு வேளைக்குப் பிறகு, மன்னர் அந்தப்புரம் செல்வார். அங்கே, ஓய்வுக்குப் பிறகு அரச மகளிரின் நிதி மற்றும் அலுவல் பிரச்னைகளை கேட்டு அவர்களுக்கான தீர்வுகளைச் சொல்வார்.




அதற்குப் பிறகு, யானைச் சண்டை, சிங்கம் அல்லது எருதுச் சண்டை, படை வீரர்களின் மற்போர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பார்த்து ரசிப்பார்.






பிற்பகலில் முழு தர்பார் தொடங்கும்.இந்தக் கூட்டத்தில், பணி நியமனம், ஊதிய உயர்வு, வழக்கு விசாரணை, அந்நிய நாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது, படைப் பணிகளுக்காக வெளியூர் செல்லும் மாநில ஆளுநர்களுக்கு விடைகொடுத்து அனுப்புதல், வெளியூர் பணி முடிந்து வந்த ஆளுநர்களைச் சந்தித்து விவரம் அறிதல், படைப் பிரிவினருக்கான நிதி ஆலோசனை ஆகியவை நடக்கும்.வழக்கமாக இரண்டரை மணி நேரம் நடக்கும் இந்த தர்பார், சில நாட்களில் மாலை வரை நீண்டுவிடுவதும் உண்டு.



தர்பாரில் மன்னர் முன் நின்று பேசும் உரிமை எல்லாருக்கும் வழங்கப்படுவது இல்லை. அது தனிப்பட்ட சிலருக்கு அளிக்கப்படும் கௌரவம். மற்றவர்கள், அந்த உரிமை பெற்றவர்கள் வழியாகவே தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும். இதுபோல கடிதம் வாசிக்க வஸீர் நியமிக்கப்பட்டு இருப்பார். அரசாங்கச் செயலர்கள் மன்னர் அமர்ந்துள்ள மாடத்தின் அருகில் நின்று, தங்களது துறைகள் சார்ந்த குறிப்புகளைப் படிப்பார்கள். இதில், மான்சப்தார், பக்ஷி, ஸதர், மீர்சாமான், திவான் எனப் பல நிலைகளில் அதிகாரிகள் உண்டு.வருவாய், நிதி, நியமனம், ஊதியம் வழங்குதல், மானியம், துறை சார்ந்த மாற்றங்கள் என முந்தைய நாள் மன்னர் இட்ட கட்டளைகளின் சுருக்கத்தை, ஒவ்வொரு நாளும் செயலர்கள் தர்பாரில் வைப்பார்கள். அதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். மன்னரின் முக்கியக் கவனம் பெற வேண்டிய விண்ணப்பங்களைத் தனியே விசாரித்து உடனடியாக அதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பது வழக்கம்.



அரசர் இட்ட கட்டளைகளை வாகுயநவிஸ் என்ற குறிப்பு எடுக்கும் அதிகாரி, தனது குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். பிறகு, அது தொடர்பான அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்ளாகும். அதன் பிறகு அதன் திருத்தப்பட்ட வடிவம் அரசர் முன்பு கொண்டுவரப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அதன் பெயர் யாத்தாஷ்ட். அதாவது, குறிப்பாணை பல நிலைகளைக் கடந்து முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்று வரும். 

வெவ்வேறு பணிகளுக்காக மன்னரிடம் ஐந்து விதமான முத்திரைகள் இருந்தன. இதில் உஸீக் என்ற முத்திரை மோதிரம் மிக முக்கியமானது. இந்த வேலைகளை முடித்த பின், மன்னர் மீண்டும் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார்.



அங்கே மாலைக் குளியல் நடக்கும். அது முடிந்தவுடன், அங்கே உள்ள தனி மண்டபத்தில் நீதிமான்கள் மற்றும் கவிஞர்கள், தத்துவ ஞானிகளுடன் இலக்கியம் மற்றும் ஞானமார்க்கம் குறித்து மன்னர் விவாதிப்பார். இந்த நேரத்தில், புதிதாக எழுதப்பட்ட கவிதைகளை வாசிக்கச் சொல்லி, மன்னர் கேட்பதும் உண்டு. சில சமயம், ஞானமரபில் உள்ள நூலின் பகுதிகள் குறித்து விவாதம் நடக்கும்.


வரலாற்று அறிஞர்களுடன் விவாதமும் நடந்து இருக்கிறது.அதன் பிறகு, பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட குஷால் கானாவுக்கு மன்னர் போய் விடுவார்.
அங்கே, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட12 விளக்குகள் நறுமண எண்ணெயில் பிரகாசமாக எரியும். விளக்கு ஏற்றப்படும் நேரத்தில் இசைப்பதற்கு என, ஈரடிப் பாடல் ஒன்று உண்டு. இந்த இடத்துக்கு, அவசரமான அரசு வேலைகளை விவாதிக்க திவா​னும் பக்ஷியும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளைச் சொல்லும் முன், மண்டியிட்டு வணங்கியே தகவலைத் தெரிவிக்க வேண்டும்.


இந்தத் தனி அறையில் சில வேளைகளில் பாரசீகத் தூதுவர்கள், மற்றும் வெளிநாட்டவருக்கு நேர்காணல் தருவது நிகழும். பகலில் விசாரிக்க முடியாத முக்கிய அலுவல்கள், ரகசியச் சந்திப்புகள், பணப் பரிமாற்ற ஆணைகள் இங்கே விவாதிக்கப்படும். பொதுவாக இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த அறையில் அரசர் இருப்பார்.பிறகு, அங்கே இருந்து கிளம்பி ஷாபுர்ஜ் எனப்படும் உட்புற மண்டபத்துக்கு மன்னர் செல்வார். அங்கேமன்னரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இளவரசர்கள் மன்னரைச் சந்தித்துப் பேசுவார்கள். 45 நிமிடங்கள் இந்த அறையில் இருந்துவிட்டு




அந்தப்புரத்துக்குச் சென்று இசை கேட்பதும், நடனத்தைப் பார்வையிடுவதும் வழக்கம். இதற்காக தேசத்தின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள், நடனக்காரிகள் அழைத்து வரப்படுவர். நிகழ்ச்சியின் முடிவில் அவர்களுக்குப் பரிசுகளைத் தந்து அனுப்புவார்.


இசை முடிந்ததும் பால், பழங்கள் மற்றும் இனிப்பு​களை மன்னர் உண்பார். இப்படித் தினமும் இசை நடன நிகழ்ச்சிகளுக்காக ஒன்றரை மணி நேரத்தைச் செலவிட்டு, பின்பு தனக்கு விருப்பமான ஒரு பெண்ணின் அறைக்கு மன்னர் சென்றுவிடுவார். அங்கே, திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு காம ரசம் சொட்டும் கதை சொல்பவர்கள் இருப்பார்கள். சிருங்காரப் பாடல்கள் இசைப்பவர்களும், கலவியின்பம் பற்றிய வேடிக்கைகளைச் சொல்லும் பெண்கள் இருப்பார்கள்.



.ஐந்து மணி முதல் ஆறு மணி நேரம்தான் மன்னரின் உறக்கம். யுத்த நாட்களில் இந்தத் துயில் மூன்று மணி நேரம் மட்டுமே. முறைப்படி தொழுகை செய்வது, நீதிமுறை சார்ந்த வழக்குகளை விசாரிக்க தனி நாள் ஒதுக்கி விசாரணை செய்வது, வெளிப்படையான நிர்வாக முறையைக் கடைப்பிடிப்பது, திருவிழாக்களில் கலந்துகொள்வது, வேட்டைக்குச் செல்வது, வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது, புலிகளைப் பழக்குவது, நுண்கலைகளைப் பயில்வது, சித்திர எழுத்துகள் எழுதுவது, நூதனப் பொறிகளைப் பரிசோதனை செய்வது என்று மொகலாய மன்னர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாமல் இருந்தது.வருடத்தில் ஒரு மாதமோ அல்லது இரண்டு வாரங்களோ மன்னர் முழுமையான பட்டினி கிடப்பார். அதை லங்கன மாதம் என்கிறார்கள். அந்த மாதங்​களில் அவர் எலுமிச்சைச் சாற்றை அருந்திக்கொண்டு எளிமையான உடைகளை உடுத்திக்கொண்டு, இசை கேட்பது, கவிதை வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவார். சாமான்ய மனிதனைப் போல, கிடைப்பதைக் கொண்டுவாழும் நிம்மதியான வாழ்க்கையை, மன்னர்கள் ஒரு போதும் அனுபவிக்கவே இல்லை.

 ஒரு மன்னர் இந்தியாவின் சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் எடுப்பதற்கு மூன்று அம்சங்கள் முக்கியமானவை என்கிறார் வரலாற்று ஆசிரியர் இபின் ஹாசன். அவை... வலிமையான படை பலம், உறுதியான மைய அரசு, மக்களைத் தொல்லை செய்யாமல் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி செய்வது ஆகியவை. இந்த மூன்றையும்கூட பல மன்னர்களால் சமாளித்துவிட முடிந்திருக்கிறது. ஆனால், அவர்களின் வாரிசுகள், சகோதரர்கள், மனைவிகளின் அதிகார ஆசையை, அதற்கான நயவஞ்சக சதித் திட்டங்களை அவர்களால் உணர முடியவில்லை. யுத்தக் களத்தில் கொல்லப்பட்டதைவிட படுக்கையில் கொல்லப்பட்ட மன்னர்கள் அதிகம் என்கிறது வரலாறு.
ராஜ வாழ்க்கை என்பது மிதமிஞ்சிய சந்தோஷமும், எதிர்பாராத நெருக்கடிகளும், தீர்க்க முடியாத மரண பயமும் கலந்தே இருந்தது. அது, பலிகொடுக்கப்படும் ஆட்டுக்கு விதவிதமான உணவுகளைத் தந்து குளிப்பாட்டி, நடமாட வைப்பது போன்றது. அந்த வகையில், மன்னரைவிடவும் சந்தோஷமான வாழ்க் கையை சாமான்ய மனிதன் அனுபவிக்கிறான் என்பதே என்றும் மாறாத நிஜம்.


ச்ச... ராஜவாழ்க்கை.... ராஜவாழ்க்கை தான் ..அனுபவிராஜா அனுபவி ..நீங்களும்தான்

சு(பர )தேசி மன்னர்கள்



                                               சு(பர )தேசி மன்னர்கள் 

அக்கால இந்தியாவில்  மன்னர் அரசு அல்லது சமஸ்தானம் (Princely state) என்பது ஒரு நிருவாகப் பிரிவு. பெயரளவில் இறையாண்மை பெற்றிருந்த மன்னர் அரசுகள், காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவற்றில் ஒருவித மறைமுக ஆட்சியே நிலவியது. ஒரு இந்திய அரசர் பெயரளவில் இவற்றை ஆட்சி செய்தாலும், உண்மையில் நிருவாக மற்றும் கொள்கைக் கட்டுப்பாடு பிரித்தானிய அரசின் கைகளில் தான் இருந்தது. இவற்றின் இந்திய ஆட்சியாளர்கள் மகாராஜா, ராஜா, நிசாம், வாலி, தாக்குர் போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தனர்.

சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.

சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார்.

அந்த கால நம் சுதேச மன்னர்களில்  பெரும்பாலானோர்கள் !..?.ஏன் எல்லோருமேதான் அன்றய  சாணக்கிய ஜாம்பவான்களான பிரிட்டிஷ்  எஜமானர்களால் மிகவும்  நெருக்கப்பட்டு ...நசுக்கப்பட்டு ...நாராடிக்கப்பட்டு ..கசக்கப்பட்டு ...கந்தலாக்கப்பட்டு ....கேவலபடுத்த்ப்பட்டு ...கிண்டலடிக்கப்பட்டு ...துரத்தப்பட்டு ...லோல்படுத்தப்பட்டலும் கூட மரியாதை கெட்ட மாண்புமிகு மாமா மன்னர்களின் லொள்ளுக்கு மட்டும் கொஞ்சமும்குறைவிலாதவ்ர்களாகவே இருந்தார்கள் ...

 சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள்.

இதோ அவ்ர்களின் லொல்லு  மற்றும் ஜொல்லு களில் சில சாம்பிள்கள்

 கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.

விட்டாரா அத்துடன் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு  கூடவே  , 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார்.

 மேலும்,தனது சாம்ராஜ்யத்தில் !? (அப்படி ஒன்று இருந்ததா..?) கல்லூரிகளே இல்லாத நிலையிலும் கூட   தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார்.(நல்லவேளை பிரஞ்சு மக்களுக்கும் நான் தான்  அதிபதி என்று கூறிக்கொண்டு பாரிஸ் சிறைசாலைக்கு கம்பி எண்ண  போகாமல் இருந்தாரே பரவாயில்லை )

காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான்..!!..?? காலையில் கண் விழிப்பது வழக்கம்.( மில்லியன் டாலர் கேள்வி..அக்கால வழக்கப்படி காசி பிராமனர்கள் பசுவின் பின்புறம் சாணம் வரும் பகுதிக்கு பூசை செய்வதுதானே  வழக்கம்...?? )  அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர்.(அப்போதைய இந்திய வைஸ்ராய் இவரை எப்படி நடத்தி இருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா !!....மறுபடியும்  ....கேவலபடுத்த்ப்பட்டு ...கிண்டலடிக்கப்பட்டு ...துரத்தப்பட்டு ...போதுமடா சாமி !!)

 பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).

இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக..?? ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும்.( கம்பேனி வழங்கும் மன்னர் மானியம் முழுவதையும் தின்றே தீர்த்திருப்பார் போல !..?) சரி சரி ..என்ன செய்வது ஆட்சியையும் இல்லை அதிகாரமும் இல்லை கூடவே மானமும் இல்லை மன்னர் பதவியாவது மிஞ்சட்டுமே.

 ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார்.(லட்சிய நோக்கம் கொண்டவர் ) அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன.ஊருக்கு ஒரு மைனர் ..ச்ச ..மன்னிக்கவும் ..நாட்டிற்கு ஒரு மன்னர் இருந்தால் தானே மண்ணிற்கு பெருமை ...!..? வேலை வெட்டி இலாத வெத்துவேட்டு மன்னர் வேறு என்ன செய்வர் ..? பாவம் ...

 டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம்.(ஏதோ... காலம் தள்ள வேண்டுமே..எப்படியும் வாரிசுமுறை மன்னர் பதவி இல்லை என்றாகிவிட்டது ...எதாவது காரணம் காட்டி,..! டல்ஹௌசி  துரை பிடுங்கி விடுவார் ...இறக்கும் வரையாவது சீட்டு கட்டு ராஜாவாக இருந்து விட்டு போகட்டுமே ....)

 ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.(கார் கலை வளர்த்த "கார்வேந்தன் "...!!? )

 இந்தியாவில் இருந்த சு(பர)தேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள்(அன்றைய மதிப்பில்)

கம்பனி ஆட்சியில் மாக்களாக இருக்கும் போதே இப்படி என்றால் .. அந்த காலத்தில் உண்மையான நம் மன்னர்கள் மக்களை என்னபாடு படுத்தி இருப்பர்கள் ...??(நெஞ்சு பொறுக்குதிலையே இந்த மானம் கெட்ட மன்னர்களை நினைத்து விட்டால்..! .. வாழ்க .!ஜனநாயகம் ...??)

இவை எல்லா வற்றையும்  தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு சு(பர)தேசி மன்னரின் நடவடிக்கை இருந்தது

. இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான்.

இவருக்கு நாய்கள் என்றால் உயிர்....(நாய் சேகர பூபதியோ ...?)

அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார்.

 ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.(தாஜ் மகாலுக்கு போட்டியாக நாய் மஹால்..!!?...அதுசரி..! கம்பனி கொடுக்கும் மானியத்தில் அவ்வளவு தான் முடியும். )

 நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை.(என்ன இது கேள்வி ...? மக்களா மானியமும் ,பட்டமும் கொடுக்கிறார்கள் ..?துரைமார்கள் அல்லவா படியளகிறார்கள் ..)

 அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.(அப்போ மகா ராணி ..?? யாரை ..?..... நமக்கேன் பெரிய இடத்து பொல்லாப்பு )

அவரது செல்ல மகள்..!? என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது..

 மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது.அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்தின் தலைமை விருந்தினர் யார் தெரியுமா ? சொன்னால் ஆச்சரிய படுவீர்கள். !!........வங்காளத்தை இரண்டாக பிரித்தவர்..! .. 1898 முதல்  1911(இந்தியாவின் அப்போதைய தலைநகர் கொல்கத்தா )  வரை இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் ஆகஇருந்தவர்!  ..அதுதாங்க....நம்ப துரை. கர்சன் பிரபு  அவர்கள் ...!!

பொதுவாக இந்திய அரண்மனைகளில் நடக்கும் விழாக்களில் பங்கேற்பது என்பது ஐரோப்பியர்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு....

விழாக்களின் ஆடம்பரமும், பகட்டும்,  , பரிமாறப்படும் உணவு வகைகளும் ,ஊதாரித்தனமும், ..கூடவே  இந்திய பொதுமகளிரின் (நாகரீகமாகவே எழுத முயன்றுளோம் ) களி  நடனமும் வெள்ளையர்களுக்கு மிகவும் விருப்பமானது.

சரி விஷயத்திற்கு வருவோம் ...ஜுனாகத் சமஸ்தானத்திலிருந்து திருமண அழைப்பிதழ் வரப்பெற்றதும் மகிழ்வுடன் காணப்பட்ட கர்சன் துரை பின்னர் விசாரித்ததில் அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று  கேள்விப்பட்டு நொந்து போய்  தலையில் அடித்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வரவில்லை...!

அப்படிமட்டும் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் இந்த புகழ் பெற்ற திருமனத்திற்கு வந்திருப்பார் எனில் லண்டன் பாராளுமன்றம் கர்சனை கிழி கிழி என கிழித்திருக்கும் ...அந்த வரலாற்று சம்பவம் நடைபெறாதது கர்சனின் அதிர்ஷ்டமே...!!

  கோபமுற்ற நவாப்  இந்திய கவர்னர் ஜென்ரலின் திருமண புறக்கணிப்பு  தன்னை அவமதிக்கும் செயல் என்றுபகிரங்கமாக அறிவித்தார்....!?

 விளைவு ...!!??.. ஒரு மாதத்திற்குள்ளாகவே மன்னர் மானியம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.(அப்படி போடு அருவாள ..)

இது ஒருபுறம் இருக்க மேற்படி  திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன.

 மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள்..மன்னிக்கவும் சுற்றமும் நட்பும் சூழ  அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.



மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது.

பிறகென்ன இனிதே திருமணம் நடைபெற்றது தம்பதியினர் குடியேற தனி மாளிகை இத்தியாதி இத்தியாதி ....

நாமும் இன்று வரை மன்னர் பெருமை பேசிக்கொண்டு முட்டாள்  தனத்திற்கு மூலம்  தேடிக்கொண்டிருக்கிறோம்....

இதை போலவே புறா திருமணம், குதிரை திருமணம்,மழை வேண்டி கழுதை திருமணம் (இன்றும் கூட)போன்ற அலங்கோலங்கள்  நம் நாகரீக..? நாட்டில் சு(பர)தேசி  மன்னர்களால் நடத்தப்பட்டது...

உண்மை என்னவென்றால் பிரிட்டிஷாரிடம் நாம் மிக அதிகமான விலை கொடுத்துதான் பாடம் கற்றுக்கொண்டோம் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை ..உங்கள் கருத்து வரவேற்கபடுகிறது ....




















Sunday 1 July 2012

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -7



வருவாய் துறை -ஆவணங்கள், 


பட்டா -7


போதுமானவரை உங்களை எச்சரிக்கை செய்துவிட்டோம் என்றாலும் கூடுதலாக இன்னும் ஒரு பதிவு 

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -6


வருவாய் துறை -ஆவணங்கள்

பட்டா -6

நெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவரின் அநேக நிலங்கள் நெடுங்காலம் கவனிக்காமல் விட்டதினால் அவரின் நிலங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும் சோக கதையை சொன்னார் . உடனே இந்த பதிவு எழுதும் யோசனை தோன்றியது .

உங்கள் நிலங்களை நீங்கள் பாதுகாக்க கீழ்க்கண்ட யோசனைகளை கடை பிடியுங்கள் :-

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை ( நன்செய் / புன்செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . இல்லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால் , அதன் மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .

வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் . சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் . பட்டா உங்களிடம் இல்லையா ...? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் .

பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் . மாற்றம் ஏதும் இருப்பின் , உடனடி கவனம் தேவை .

சில பேர் , பட்டாவை வாங்கி பார்த்தால் , அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .


 

வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது . ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும் . அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .


வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் . உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு , உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .


வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால் , நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு மனு கொடுக்கலாம் .


ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப்படவேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .


கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது .




உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால் , அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு நலமாக இருக்கும் . சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் .

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -5

வருவாய் துறை -ஆவணங்கள், 


பட்டா -5


சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்


விளக்கங்கள் விவரம்:

பட்டா:

 ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா: 

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: 

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்:

 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்:

 கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்: 

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்: 

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து

பிரிவு.


இலாகா: 

துறை.


கிரயம்: 

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று: 

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்:

 நில அளவை எண்.



இறங்குரிமை:

 வாரிசுரிமை.


தாய்பத்திரம்: 

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.



ஏற்றது ஆற்றுதல்: 

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.



அனுபவ பாத்தியதை: 

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு:

 நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்: 

அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்:

 பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை: 

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

பட்டா மாறுதல் செய்வது எப்படி-பட்டா -4


பட்டா பெறுவது எப்படி 

பட்டா -4

பட்டா என்ற ஆவணத்தை பற்றி ஓரளவுக்கு முந்தய பதிவுகளில் தெரிந்துகொண்டோம் ,இனி பட்டா மாற்றம் செய்வது பற்றி அறிந்துகொள்வோம் ,,

'பட்டா' மாறுதலுக்கான விண்ணப்பம் அளித்தல் நடைமுறைகள் (Applying for Patta Name Transfer ie. Changing the Name of the Owner of an immovable property like farmlands.)

பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த உரிமைகளை மாற்றும் பொழுது, அந்த உரிமை மாற்றத்தை முறையாக ஆவணப்படுத்தி, அந்த ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்த பின்னர் அதுவே அச் சொத்தின் உரிமையைச் சொத்தை வாங்குபவருக்கு அளித்து விடும். என்றாலும், அந்த உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரமே 'பட்டா' எனப்படும்.



அதாவது ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மற்றொருவருக்கு விலைக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், அச்சொத்தை வாங்குபவருடன் சேர்ந்து, அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்த வேண்டும். இப்படி ஆவணப்படுத்துகையில், ஒரு சொத்தை விற்பவரே இந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்தலாம். அல்லது இதற்காக விற்பவரும் வாங்குபவரும் சேர்ந்து, அரசிடம் முறையாக உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை நாடலாம். இப்படி அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்துவதற்கு, உறுதியான, தூய்மையான வெள்ளைத் தாளில் விற்பவரின் பெயர், முழு முகவரி, சொத்தின் உரிமைக்கான வழிகள் உள்ளிட்ட தகவல்களுடன், சொத்தை வாங்குபவரின் பெயர், முழு முகவரி போன்ற விவரங்களுடன், அவற்றிற்கான சட்டப்பூர்வமான சான்றுகளுடன் ஆவணத்தைத் தயார் செய்து, அந்த ஆவணத்தை, அச்சொத்து உள்ள பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அங்கு, அப்பதிவிற்குப் பதிவுக் கட்டணமும், அச் சொத்தின் விற்பனை நடவடிக்கைக்கான வரிகளும் ரூபாய் மதிப்பில் பணமாக/ கேட்பு வரைவோலையாக கட்டப்படவேண்டும். இதில் பதிவுக்கட்டணத்தைத் தவிர்த்து, மற்ற வரிகளைப் பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ கட்டுவதற்குப் பதில் ஆவணப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் உறுதியான தூய்மையான வெள்ளைத் தாள்களுக்குப் பதில் அந்த வரிக்கு இணையான மதிப்புள்ள முத்திரைத் தாள்களைக் கூட வாங்கிக் கொள்ளலாம்.


இந்த ஆவணப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தலை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்:

வழக்கமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குகிறோம். அப்பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அதைச் சொன்னால் போதும்- கடைக்காரர் அதை எடுத்துக் கொடுத்துவிடுவார்- இது ஒரு விதமான வணிக நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் வாங்குபவர் கேட்கும் ஒரு பொருளின் பெயரைச் சொன்னாலே அதைக் கடைக்காரர் எடுத்துக் கொடுத்துவிடுவார். இங்கு ஒரு பெரிய அளவிலான ஒரு தொகை செலவழித்துச் செய்யப்படும் வணிக நடவடிக்கை ஒன்றை எடுத்துக்கொண்டால், அதாவது ஒரு இலகுரக இயக்கூர்தி- மகிழ்வுந்து ஒன்றைச் சுமார் நாற்பது இலட்ச ரூபாய்க்கு ஒருவர் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த வணிக நடவடிக்கையில் வாங்குபவர் பணத்தைக் கொடுக்கிறார்; விற்பவர் அதற்கான 'இரசீதுடன்' பொருளைக் கொடுக்கிறார். வாங்குவது என்பது இத்துடன் முடிந்துவிட்டது. வாங்கும் பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அந்தப் பெயர் ஏற்கனவே வரையறுக்கப்பட்டிருக்கும்; அப்பொருளுக்கு ஒரு அடையாளமும் இருக்கும். அந்தப் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அப்பொருளுக்கு ஒரு நிலையான விலையும் இருக்கும். எனவே, விற்பனையாளர் தரும் 'இரசீது' அப்பொருளின் பெயர் மற்றும் அடையாளத்தைத் தாங்கி இருக்கும். அந்த விற்பனையாளர் ஒரு வழக்கமான விற்பனையாளர் என்பதால் அவரின் விற்பனையகத்தில் 'இரசீதுப் புத்தகம்' மற்றும் சட்டப்படியான அனைத்து ஆவணங்களும் இருக்கும்.

அதே நேரம் ஒரு அசையாச் சொத்தை ஒருவர் வாங்கும் போது அச் சொத்திற்கு அனைவருக்கும் தெரியுமளவிற்கு ஒரு வரையறுக்கப்பட்ட பெயர் இருக்காது. வீடு என்றோ, விளை நிலம் என்றோ ஒரு பொதுவான பெயரைக் குறிக்க முடியுமா? அல்லது சொத்தை விற்பவர்கள் வழக்கமான விற்பனையாளர்கள் இல்லை என்பதால் அவர்களிடம் 'இரசீதுப் புத்தகமும்' இருக்காது. எனவே, ஒரு பத்து 'ஏக்கர்' நன்செய் நிலத்தை வாங்கிக் கொண்டு உங்களிடம் பத்து ஏக்கர் நன்செய் நிலத்தை நான் வாங்கியாயிற்று; அதற்காக நான் செலுத்திய தொகைக்கு ஒரு 'இரசீது' போட்டுத் தாருங்கள் என்று என்றும் கேட்க முடியாது. அது இவ்வளவு எளிதான வேலையன்று. அதனால், இது போன்ற சொத்துக்களை விற்றல், மற்றும் வாங்குதலில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும். அதாவது மகிழ்வுந்து வாங்கும் பொழுது விற்பனையாளர் தரும் 'இரசீது'வைப் போல, இங்கு ஒரு 'இரசீது' கொடுக்க வேண்டும். அந்த 'இரசீது' தான் ஆவணம் ஆகும். இந்த 'இரசீதில்', விற்பவர் மற்றும் வாங்குபவர் குறித்த தகவல்கள்- அதாவது பெயர், முழு முகவரி போன்றன- விற்கப்படும் சொத்தைப் பற்றிய முழு விவரங்கள்- அதாவது சொத்தின் பரப்பளவு, சொத்து இருக்கும் இடம், அச்சொத்தின் உரிமை விற்பவருக்கு எப்படி வந்தது, சொத்தின் தற்காலத்திய விலை மதிப்பு, இவர்கள் விற்கும் விலை உள்ளிட்ட விவரங்கள்- முழுமையாக இருக்க வேண்டும். இவ்விவரங்கள் அனைத்தும் அடங்கிய ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த ஆவணத்தைத் தயாரிக்கத் தெரிந்த விற்பனையாளர் தனக்காகத் தானே ஒரு ஆவணத்தைத் தயாரிக்கலாம். அல்லது அரசிடம் இசைவு பெற்ற ஆவன எழுத்தர் ஒருவரிடம் சென்று ஆவணப்படுத்தலாம். அப்படி ஆவணப்படுத்திய பின், அதை அப்பொழுதே முறையாக அப்பகுதிச் சார் பதிவாலரிடத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பதிவுக்கட்டனமும், முத்திரைத் தாள் கட்டணமும் விதிக்கப்படும். அப்படி விதிக்கப்படும் பதிவுக்கட்டனத்தைப் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். முத்திரைத் தாள் கட்டணத்தையும் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். இந்த முத்திரைத் தாள் கட்டணத்தை பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்துவதற்குப் பதிலாக, அக்கட்டனத்தின் அளவு முக மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி, விற்பனை ஆவணத்தையே அம்முத்திரைத் தாள்களிலேயே தயாரித்து விடுதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, முத்திரைத் தாள் கட்டணத்தை முத்திரைத் தாள் வடிவிலும் அல்லது வேறு சில ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவிலும் செலுத்தலாம்.

இந்த ஆவணத்தைப் எழுதிப் பதிவு செய்யும் பொழுது, பதிவாளர் அலுவலகத்தில் 'முத்திரைத் தாள்' வரி என்று சொத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைக் கட்ட வேண்டும். அந்த வரியை நேரிடையாகக் கட்டுவதற்குப் பதிலாகத் தான், அந்த வரியின் மதிப்பின் அளவிற்குச் சமமான மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி அத் தாள்களில் ஆவணத்தைத் தயார் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.


விவசாய நிலங்கள், வீடுகள், காலி இடங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்தினை வாங்கும் பொழுது, அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா மாறுதல் என்று பெயர்.

ஒருவர் அல்லது பலர் சேர்ந்து ஒரு அல்லது பல அசையாச் சொத்துக்களை விற்கும் பொழுது, விற்பவ(ர்களும்) ரும், வாங்குபவ(ர்களும்)ரும் சேர்ந்து அதற்காக ஒரு ஆவணம் தயாரித்து அதை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்த ஆவணத்துடன் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதற்கெனத் தனியாக விண்ணப்பப் படிவம் உள்ளது. அவ்விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து அல்லது அதே போல கையில் எழுதி ஒரு விண்ணப்பம் தயார் செய்து விண்ணப்பத்துடன் அச்சொத்தின் தற்போதைய உரிமை மாற்றத்திற்கு முந்தைய உரிமை மாற்றத்தின் நாளுக்கு முன்தினம் முதல் இந்த விண்ணப்பம் அளிக்கும் நாள் வரையிலான காலத்திற்கு சொத்து எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்தப் படவில்லை என 'வில்லங்கச் சான்றிதழ்' ஒன்றையும் சேர்த்து விண்ணப்பிக்கவேண்டும்.

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -3


வருவாய் துறை -ஆவணங்கள்,

 பட்டா -3

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.